திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்

ஒத்த பழமொழிகள்:

  • ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலே அழிவான்.
  • கெடுவான் கேடு நினைப்பான்.
  • முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.

மற்றவர்களுக்கு கெடுதல் நினைப்பவனுக்கு கெட்டதே நடக்கும்.கேடு என்றால் கெடுதல் என்று அர்த்தம்.அடுத்தவன் அழிந்துபோக வேண்டும் என்று நினைப்பவன் தன்னைத் தானே அழித்துக் கொள்கிறான்.இந்தக்கருத்தையே மேற்கண்ட பழமொழிகள் வலியுறுத்துகின்றன.

“ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலே அழிவான்” என்றால் ஒருவன் செய்யும் கெட்ட செயல்களே அந்த ஆயுதம்.அதுவே அவனைக் கொள்ளக்கூடிய ஒன்றாகிவிடுகிறது.

“திணை விதைத்தவன் திணை அறுப்பான்”.அதாவது நல்லது செய்வதின் பலன் நல்லதே. “வினை விதைத்தவன் வினை அறுப்பான்”.அதாவது கெட்டது செய்வதின் பலன் கெட்டதே.

“முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்”.இப்போது நாம் செய்யும் தான தர்மங்கள் பிற்காலத்தில் நம்மைக் காப்பாற்றும்.தீங்கு செய்தால் நம்மை அழிக்கும்.

ஒரு சிறுகதை:

ஒரு கணவன்-மனைவிக்கு குழந்தை ஒன்று பிறந்தது.என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது குழந்தையின் கண்கள் கடுகு போன்று சிறியதாக இருந்ததால் அதற்கு ‘கடுகு’ என்றே பெயர் வைத்துவிட்டனர்.

குழந்தை சிறுவனானதும் பள்ளியில் சேர்த்தார்கள்.இந்த விசித்திரமான பெயரால் அவன் மிகவும் அவமானப்பட்டான்.அனைவரும் அவனை “கடுகு! கடுகு!” என்று கிண்டலும் கேலியும் செய்தனர்.ஒரு கட்டத்தில் அவை எல்லை மீறின.

இதனால் அவனுக்கு தன் பெயர் மீதும் மற்றவர்கள் மீதும் அளவுக்கு அதிகமான வெறுப்பு ஏற்பட்டது.

ஒருநாள் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு பெரியவர் ஆலமரத்தடியில் அமர்ந்திருந்தார்.அவர் ஒரு சித்தர்.அதீத சக்திகளைக் கொண்டவர்.அவர் கடுகை அழைத்து தண்ணீர் கொண்டுவருமாறு கேட்டார்.அவனும் அதைச் செய்தான்.தாகம் தணிந்த சித்தர் மகிழ்வடைந்து அவனுக்கு ஒரு வரம் தருவதாக வாக்களித்தார்.

அவன் யோசித்து ஒரு வரம் கேட்டான்.அதனைக் கேட்டு சித்தர் அதிர்ந்துபோனார்.அப்படி என்ன கேட்டான்?

தன்னை கடுகு என்று அழைப்பவர்கள் இறந்துவிடவேண்டும் என்பதே அது.இருந்தாலும் வாக்கு கொடுத்துவிட்டோமே என்று அந்த வரத்தை அளித்தார் சித்தர்.

கடுகு பள்ளிக்குச் சென்றான்.முதலில் வகுப்பாசிரியர் வருகைப்பதிவு எடுக்கும்போது “கடுகு?” என்று அழைத்தார்.அவன் மறுமொழியாக “உள்ளேன் ஐயா” என்று கூறினான்.ஆனால் என்னக் கொடுமை! ஆசிரியர் மாரடைப்பால் இறந்துவிட்டார்.இதைப் பார்த்த கடுகு வரம் வேலை செய்வதை உணர்ந்து சந்தோஷப்பட்டான்.

அடுத்தது அவனது நண்பர்கள் “கடுகு! என்னடா உன்னைக் கேள்விக்கேட்டதும் ஐயா செத்துபோயிட்டாரு?” என்று கேட்ட மறுகணமே அனைவரும் மயக்கமருந்து கொடுக்கப்பட்டவர்களைப் போன்று பொத் பொத் என விழுந்து இறந்தனர்.

இவ்வாறாக பள்ளியில் இவனைத்தவிர அனைவரும் இறந்தனர்.ஒரு பக்கம் சந்தோஷமாக இருந்தாலும் இத்தனைப் பேரைக் கொன்றுவிட்டோமே என்ற பயம் கடுகைத் தொற்றிக்கொண்டது.பயந்துகொண்டே வீட்டிற்க்குச் செல்லும் வழியில் அவனைக் கூப்பிட்டவர்கள் அனைவரும் இறந்தனர்.

வீட்டில் நுழைந்தவுடன் அவனது அப்பா “டேய்! கடுகு! என்னடா சீக்கிரம் வந்துட்ட?” என்று கேட்டதும் இறந்தார்.உடனே அவனது அம்மா, தன் கணவர் இறந்து கிடப்பதை பார்த்து “கடுகு அப்பாவுக்கு என்னடா ஆச்சி?” என்று கேட்டார்.அவரும் இறந்தார்.

அப்போதுதான் கடுகிற்கு தான் செய்த தவறு புரிந்தது.தனது பெற்றோர்களை கட்டிப்பிடித்து அழுதான். “அடுத்தவர்களுக்கு கெட்டது நினச்சே! இப்ப உன் பெற்றோர்களே இறந்துவிட்டார்களே கடுகு!” என்று தனைத்தானே திட்டிக்கொண்டான்.அப்போதே அவனும் இறந்தான்.

இந்தக் கதையிலிருந்து நாம் அறிந்து கொள்வது என்னவென்றால் நாம் எப்போதும் மற்றவர்களுக்கு நல்லதையே நினைக்கவேண்டும்.அவர்களே நமக்கு கெட்டது செய்தாலும் நாம் கெட்டது நினைக்கக்கூடாது.அப்படி நினைத்தால் அதுதான் நமது அழிவிற்கான துவக்கம்.

Subscribe
Notify of
help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.