இவைகள் முன்னோர்களின் மூட நம்பிக்கைகளா?

பெரியவர்கள் இளையவர்களை அது செய்யக்கூடாது இது செய்யக்கூடாது என்றும் இந்த நேரத்தில் அதை செய்யக்கூடாது அந்த நேரத்தில் இதை செய்யக்கூடாது என்றும் இன்ன இன்னவற்றை இப்படித்தான் செய்யவேண்டும் என்றும் வலியுறுத்துவார்கள். சில சாங்கியங்களையும் சம்பிரதாயங்களையும் கடைபிடிப்பார்கள். இளைஞர்கள் அவற்றை மூட நம்பிக்கைகள் என்று கூறுகிறார்கள்.

என்னைப் பொறுத்தவரை பெரியவர் கூற்றுக்கள் பெரும்பாலும் மூட நம்பிக்கைகளாக இருக்கமுடியாது. ஏனெனில் அவை அவர்களின் அனுபவத்தினால் கூறப்படுபவை; பட்டறிவினால் கண்டுகொள்ளப்பட்டவை. நம் முன்னோர்கள் கூறி வைத்துள்ள ஒவ்வொன்றிற்கும் ஒரு திடமான காரணம் இருக்கிறது. அந்த காரணங்களையெல்லாம் அடுத்த தலைமுறைகளுக்கு கூறி வளர்க்காததால் நமக்கு அவர்கள் கூறுவதற்கான உண்மையான காரணம் தெரிவதில்லை அவ்வளவுதான்.

இந்த இடுகையில் நாம் தொன்றுதொட்டு கடைபிடித்துவரும் சில பெரியவர் கூற்றுக்களைப் பார்ப்போம். முடிந்தவரை பல வயதானவர்களிடம் கேட்டு இவைகளை எழுதியுள்ளேன். இவைகளில் ஏதேனும் தவறாக இருப்பின் பின்னூட்டத்தில் கூறவும்.

வெளியூருக்கு போகும்போது அடுத்தவர் எங்கே போகிறோம் என்று நம்மை கேட்கக்கூடாது.

இயற்கை ஒவ்வொன்றிற்கும் ஒரு விதி வைத்திருப்பதுபோல் நமது காரியங்கள் கைகூடவும் சில நேரங்களையும் விதிகளையும் வைத்திருக்கிறது. அவற்றை சில சகுணங்கள் மூலம் நமக்கு உணர்த்துகிறது. அவைகளை நாம் மூட நம்பிக்கை என்றும் கூறிவிட முடியாது. அவற்றில் ஒன்றுதான் போகும்போது எங்கே போகிறோம் என்று கேட்டால் அந்த காரியம் உருபடாது என்பது.

உதாரணமாக, உறவினர் ஒருவருக்கு பெண் பார்க்க சென்றார்கள். எல்லாரும் கிளம்பி வெளியே சென்றபோது, பக்கத்து வீட்டில் இருந்த ஒருவர், “என்ன எல்லாரும் எங்க கிளம்பிட்டீங்க?” என்று கேட்டார். அவர்கள் கொஞ்சம் கடுப்புடன் பதில் கூறிவிட்டு கடவுளை மீறி என்ன நடந்துவிடும் என்னும் பாணியில் சென்றனர். ஆனால் பெண் வீட்டிலோ பெண் படிக்கவேண்டும் என்று கூறுவதாக சொல்லி அவர்களை அனுப்பிவிட்டனர். இதைப்போன்று பலவற்றை உங்கள் வாழ்க்கையில் அனுபவித்திருப்பீர்கள். அதனால் இதைப்பற்றி அதிகம் பேசவேண்டியதில்லை.

வெளியூரூக்கு செல்லும்போது கதைவை இடிக்கக் கூடாது, தலை இடிக்கக் கூடாது, கால் தடங்குதல் கூடாது.

அப்படி நிகழ்ந்தால் அந்த நேரத்தில் சென்றால் நமது காரியம் தடைபடும் என்று அர்த்தம். எனவே மீண்டும் வீட்டிற்குள் வந்து தண்ணீர் குடித்துவிட்டு செல்வார்கள். அதன் நோக்கம் நேரத்தை கடத்துவதுதான். அதாவது ஒவ்வொரு நேரத்திற்கும் ஒரு விதி இருக்கிறது. எனவே வேறு நேரத்தில் செல்லும்போது நாம் நினைத்து செல்லும் காரியம் கைகூட வாய்ப்பு இருக்கிறது.

வெளியூருக்கு செல்லும்போது பூனை குறுக்கே வரக்கூடாது.

பூனை குறுக்கே வருதல்

இந்த கூற்று உலகறிந்த உண்மை. ஆனாலும் பூனை போகும் திசையை வைத்து பலன் அமைகிறது எனவும் கூறப்படுகிறது. வலப்புறமிருந்து இடப்புறம் சென்றால் தீமை எனவும், இடப்புறம் இருந்து வலப்புறம் சென்றால் நன்மை எனவும் பெரியவர்கள் கூற கேட்டிருக்கிறேன்.

சண்டை பிடித்துக் கொண்டு ஒரு காரியத்தில் இறங்கினால் அது தோல்வியில்தான் முடியும்.

உதாரணமாக ஒரு வீட்டில் உள்ள தம்பதிகள் ஒரு காரியத்தில் இறங்குகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். கணவன் மனைவி இருவரும் மனம் ஒத்து அந்த காரியத்தை செய்யும்போது அவர்களிடையே நேர்மறை எண்ணங்கள் இருக்கும், எனவே அந்த காரியமும் கைகூடும். அதுவே அவர்கள் சண்டை பிடித்துக்கொண்டு அந்த காரியத்தில் இறங்கினால் அவர்களிடையே எதிர்மறை எண்ணங்கள்தான் இருக்கும். எனவே, அந்த காரியத்திற்கு பலன் கிடைப்பது மிகக்கடினமே. சில நேரங்களில் தற்காலிக வெற்றி மட்டுமே கிடைக்கும்.

வாசற்படியில் உட்காரக்கூடாது.

வாசற்படியில் உட்கார்ந்தால் வீட்டில் கடன் அதிகரிக்கும் என்பது பெரியோர் வாக்கு. மேலும் கற்பிணிப் பெண்கள் வாசற்படியில் உட்கார்ந்தால் வயிற்றில் இருக்கும் குழந்தையின் தலை பெரிதாகும் என்பார்கள்.

பொழுதெறங்கி தூங்கக் கூடாது.

அதாவது மாலைப் பொழுதில் தூங்கக்கூடாது. உண்மையில் அவ்வாறு தூங்குவது ஆரோக்கியத்திற்கு கேடு. ஐதீகத்தின்படி மாலைப்பொழுது லட்சுமி வரும் நேரம் என்பார்கள். மூதேவி உள்ளே இருந்தால் லட்சுமி எப்படி வரும்?

ஒரு இடத்திற்கு போகும்போது பாம்பு பார்க்கக் கூடாது.

பாம்பு பார்க்கவே கூடாது, அதுவும் சாரைப் பாம்பை அறவே கூடாது. உதாரணமாக ஒரு விவசாய நிலம் வாங்க அந்த இடத்தைப் பார்க்க செல்கிறோம் என்று வைத்துக்கொள்வோம். அந்த இடத்தை பார்வையிட்டுக் கொண்டிருக்கும்போது அங்கு சாரைப் பாம்பைப் பார்த்தால் உடனே நாம் முடிவுசெய்துவிடவேண்டியதுதான், அந்த இடம் நமக்கில்லையென்று. அந்த இடத்தை வாங்கினால் குடும்பம் விருத்திக்கு வராது என்பதை கடவுள் சாரைப் பாம்பு மூலம் உணர்த்துகிறார். இது எல்லா விதமான விஷேசங்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.

இருட்டில் சாப்பிடக்கூடாது.

அப்படி சாப்பிட்டால் நாம் ஒரு கை எடுத்து சாப்பிடுவோம், கூடவே பேய் ஒரு கை எடுத்து சாப்பிடும். எனவே நமக்கு கிடைக்கவேண்டிய சத்தை பேய் எடுத்துக்கொள்ளும். இப்படித்தான் பெரியவர்கள் சிறுபிள்ளைகளை பயமுறுத்துவார்கள். ஆனால், உண்மை என்னவென்றால் இருட்டில் நமது சாப்பாட்டில் பூச்சி விழுந்தால் கூட தெரியாது. எனவே அவற்றையும் நாம் சேர்த்து சாப்பிட வாய்ப்பு இருக்கிறது. இவ்வாறு கூறினால் நாம் கேட்கவா போகிறோம்? எனவேதான் நம்மை பேய் பிசாசு என்று பயமுறுத்தி வைத்திருக்கிறார்கள்.

உச்சந்தலையில் பேன் இருத்தல்

15 வயதிற்கு உட்பட்ட பெண்கள் தலையில், உச்சந்தலையிலேயே பேன் அதிகமாக தென்பட்டால், அவர்கள் பிற்கால வாழ்க்கை மிகவும் வேதனை நிறைந்ததாக இருக்கும். அவர்கள் காலம் முழுக்க தன் உழைப்பிலேயே வாழவேண்டிய நிலையிருக்கும், மற்றவர் உதவி கிடைக்காது. நானே, என் வாழ்கையில் பலரிடம் அவர்கள் கதையை கேட்கும்போது, இந்த விஷயத்தையும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

தலையில் சிக்கு இருத்தல்

சில பெண்களுக்கு முதல் நாள் வாரிய தலையை அடுத்தநாள் காலையில் வாரும்போது, அப்போதுதான் வாரியதுபோன்று சீப்பு சர சர வென செல்லும். ஆனால் சில பெண்களுக்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பு வாரிய தலையைகூட மறுபடி வாரும்போது சீப்பில் சிக்கு ஏற்படும்; முடியை பிச்சு பிச்சு எடுப்பார்கள்; ஒரு இரண்டு நாள் தலை சீவாமல் விட்டுவிட்டால் சொல்லவே தேவையில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு வாழ்க்கையே சிக்கல்தான்.

தொடரும்…

Subscribe
Notify of
help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
guest
2 Comments
Inline Feedbacks
View all comments
திண்டுக்கல் தனபாலன்
ஜனவரி 2, 2015 3:31 மணி

என்னமோ போங்க…! சிலவற்றை மனது ஏற்றுக் கொள்ள மறுக்கிறது…

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.