பகுதி-4 ஐப் படிக்க இங்கு சொடுகவும்.
1. சொந்த புத்தியும் இல்லை, சொல் புத்தியும் இல்லை.
நமக்காக எது சரி எது தவறு என்ற அறிவு இருக்கவேண்டும். அல்லது பெரியவர்கள் கூறுவதையாவது கடைபிடிக்கவேண்டும். இரண்டையுமே செய்யாமல் அறிவுக்கெட்டதனமாக நடந்துகொண்டால் நம்மை இப்படித்தான் திட்டுவார்கள்.
2. உறவு போகாமல் கெட்டது, கடன் கேட்காமல் கெட்டது.
அடிக்கடி உறவினர்களைச் சென்று பார்த்துக் கொண்டிருந்தால்தான் அவர்களுக்கும் நமக்கும் ஒரு பிணைப்பிருக்கும். இல்லையென்றால், ஒரு சுப நிகழ்வுகளுக்குக் கூட நம்மை அழைக்க மறந்துவிடுவார்கள். அல்லது இப்படியும் கூறலாம். ஒரு சுப நிகழ்வுக்கு நம்மை மிகுந்த முக்கியத்துவம் கொடுத்து அழைத்தார்கள். ஆனால் நாம் போகவில்லையென்றால் அவர்களுக்கும் நமக்குமான உறவு துண்டிக்கப்படும்.
அதுபோல, கடனைக் கொடுத்தவர்கள் வாங்கியவர்களிடம் அடிக்கடி கேட்டால்தான் அவர்களுக்கும் திருப்பித் தரவேண்டும் என்று எண்ணம் வரும். இல்லையென்றால் நம்மை ஏமாற்றத்தான் முயல்வார்கள்.
3. கடன் இல்லாக் கஞ்சி கால் வயிறு போதும்.
ஒருவன் தனது அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்துகொண்டு, கடன் தொந்தரவு இல்லாமல் வாழ்ந்தால் அவன்தான் உலகத்திலேயே மகிழ்வாக வாழும் மனிதன்.
4. காலம் போகும், வார்த்தை நிற்கும்.
நாம் பேசும் வார்த்தைகளை ஒரு முறைக்கு பல முறை யோசித்துப் பேசவேண்டும். ஒருவரின் மனதை புண்படுத்துமாறு பேசினால், என்னதான் அவர் நம்மை மன்னித்தாலும், நாம் பேசியது அவர் மனதில் ஆரா வடுவாக இருக்கும்.
5. சர்க்கரை என்றால் தித்திக்குமா?
வாழ்க்கைக்கு எப்படி வாழவேண்டும் என்று கனவு கண்டால் மட்டும் போதாது. அந்த கனவை அடைய கடினமாக உழைக்கவேண்டும். அப்போதுதான் வெற்றி கிட்டும்.
6. சொப்பனத்தில் கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
மேற்கண்ட பழமொழியின் வேறொரு வடிவம்தான் இது. வெறும் கனவு காண்பதால் மட்டும் வாழ்கையில் வெற்றி பெற முடியாது.
7. தண்ணீர் வெந்நீரானாலும் நெருப்பை அமிக்கும்.
தண்ணீர், பச்சை தண்ணீராக இருந்தாலும் சுடுநீராக இருந்தாலும் அதனை நெருப்பின் மீது ஊற்றினால் நெருப்பு அமிந்துபோகும். அதுபோல, ஒருவரின் திறன் எந்த சூழ்நிலையிலும் குறைவதில்லை.
8. துணை போனாலும் பிணை போகாதே.
ஒருவருக்கு துணையாக அவரை ஊக்குவிக்கலாமே தவிர, அவருக்கு பதிலாக நாம் எதையும் செய்யக் கூடாது. உதாரணத்திற்கு, சிலர் தங்கள் நண்பன் வாங்கிய கடனுக்காக பொறுப்பு கையெழுத்துப் போட்டுவிட்டு நண்பன் அந்த கடனைத் திருப்பி செலுத்தமுடியவில்லையென்றால், தாங்களே அதனை அடைக்கும் சூழ்நிலைக்கு வந்து அல்லல் படுவதைப் பார்த்திருக்கிறோம்.
9. நாய் வேடம் போட்டால் குரைத்துத்தான் தீர வேண்டும்.
அதாவது “பேய்க்கு வாக்கப்பட்டா புளிய மரத்துல தொங்கிதானே ஆகவேண்டும்!” என்பதற்கு இணையான பழமொழி. நாம் செய்த வினைக்கான பயனை அடைந்துதான் ஆகவேண்டும். சூழ்நிலைக்கு ஏற்றாற்போன்றும் சில காரியங்களை செய்துதான் தீரவேண்டும்.
10.நீருள்ள மட்டும் மீன் துள்ளும்.
பணக்காரர்கள் தாம் தூம் என்று செலவு செய்வார்கள். எவ்வளவு நாளைக்கு? எல்லாம் அந்த பணம் உள்ளவரை மட்டும்தான். சிலர், தங்கள் அருகில் நண்பர்கள் பக்கபலமாக இருந்தால், ஒரு பிரச்சினை வரும்போது தங்கள் மேலே தவறு இருந்தாலும் கூட, நண்பர்கள் இருக்கிறார்கள் என்பதற்காக மிகவும் அதிகமாக பேசி தங்களது வீரத்தை நிரூபிக்க முயல்வார்கள். அதுவே அவர்கள் தனியாக இருந்தால், பயந்துபோய் ஓடிவிடுவார்கள்.
11.அழிந்த கொல்லையில் குதிரை மேய்ந்தாலென்ன, கழுதை மேய்ந்தாலென்ன?
“கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் எதற்கு?” என்பதற்கு இணையான பழமொழி. அதாவது “வெள்ளம் வரும் முன் அணை போடுக” மற்றும் “வருமுன் காப்பதே நலம்” என்னும் பழமொழிகளின் கருத்தைக் கடைபிடிக்கவேண்டும்.
12.மான் என்று சொன்னால் புள்ளியா குறைந்துவிடும்?
ஒரு செயலை செய்ய முயல்வதால் நமக்கு எந்த நஷ்டமும் இல்லை. ஆனால், அதனை செய்யத் தொடங்கும் முன்பே அது முடியாது, அதனால் நஷ்டம் வரும் என்று கூறுவது தவறு.
13.கத்தரிக்காய் முத்தினால் கடைதெருவுக்கு வந்துதானே ஆகனும்.
அதாவது, எந்த ஒரு விசயத்தையும் நீண்ட நாளைக்கு மறைத்து வைக்க முடியாது. எப்பேற்பட்ட ரகசியமாக இருந்தாலும் ஒருநாள் அது வெளிப்பட்டுவிடும்.
14.புளி மலையில விளைந்தாலும் உரலில் குத்து பட்டுதானே ஆகவேண்டும்.
புளியை கொட்டையை எடுக்க உரலில் போட்டு குத்துவர்கள். மலையில் விளைந்தாலும் இதற்கு தப்ப முடியாது. அதுபோல, என்னதான் பெரிய பணக்காரனாக இருந்தாலும் மனிதர்களுக்கான வேதனைகள், சோதனைகள் மற்றும் சிரமங்களை அனுபவித்துதான் தீரவேண்டும்.
15.அங்கிட்டும் இருப்பான் இங்கிட்டும் இருப்பான், ஆக்கர சோத்துல பங்கும் கேப்பான்.
சிலர் பச்சோந்திபோல் அனைவரிடமும் அவரவர்களுக்கு ஏற்றாற்போன்று பேசிக்கொண்டு அவர்களது குடியைக் கெடுப்பார்கள். அவர்களைப் பற்றிய பழமொழிதான் இது.
அனைத்து விளக்கங்களும் அருமை…
மிகவும் ரசித்தது : 5 & 10
தொடர வாழ்த்துக்கள்…
“தங்கள் அருமையான பதிவுகளை TamilBM( http://tamilbm.com/ ) திரட்டியிலும் இணையுங்கள்.
குண்டு சட்டியில் குதிரை ஓட்டுற.. என்று வழக்கு உள்ளது… Please give the real proverb and meaning
குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது என்பதன் அர்த்தம்.
பட்டறிவு (அனுபவ அறிவு) இல்லாமல் ஆதிக்கம் செய்வது. அதாவது ஒரு குறுகிய வட்டத்திற்குள் நாட்டாமை செய்வது.