ஊரே எனக்கு சொந்தம். நான் யாருக்கு சொந்தம்?

நான்-யாருக்கு-சொந்தம்

கடந்த பதிவில் என்னைப் பற்றி கூறியிருந்தேன். இந்த பதிவில் என் சொந்தங்களைப் பற்றி கூறலாம் என நினைக்கிறேன். என்னுடைய சொந்தங்கள் எத்தனைப் பேர் இருப்பார்கள்? இதுதான் திடீரென்று என் மனதிற்குள் எழுந்த கேள்வி. ஒரு ஊரே எனக்கு சொந்தம் என்று சொன்னால் நம்புவீர்களா? தோராயமாக ஒரு கணக்குப் போட்டுப் பார்ப்போமே! வாருங்கள் Census எடுப்போம். கொஞ்சம் கடுப்பாகாமல் என்னோடு கூடவே கணக்கு போட்டுட்டு வாங்க.

எனக்கு என் கொள்ளு பாட்டன், முப்பாட்டன் பற்றியெல்லாம் தெரியாது. ஏதோ, என் அம்மா அப்பாவிடம் கேட்டு என் தாத்தா பாட்டிகளைப் பற்றி மட்டுமே அறிந்துகொண்டேன்.

ஒவ்வொருவருக்கும் நிரந்தர சொந்தம் அம்மா, அப்பா, உடன்பிறந்தவர்கள், மனைவி அல்லது கணவர் மற்றும் பிள்ளைகள்தான். ஆகவே, என் அம்மா அப்பா மற்றும் தம்பியை சேர்த்து எனக்கு 3 பேர் நிரந்தர சொந்தங்களாக உள்ளனர்.

அம்மா வழி சொந்தங்கள்

முதலில் என் அம்மா வழி தாத்தா பாட்டி பற்றி.

தாத்தா மற்றும் பாட்டியைச் சேர்த்தால் எண்ணிக்கை 2 பேர்.

தாத்தா வழி

என் தாத்தா, அதாவது அம்மாவின் அப்பாவோடு பிறந்தவர்கள் ( 4 ஆண் + 3 பெண்) 7 பேர்.

அவர்கள் அனைவருக்கும் திருமணம் நடந்ததால் அவர்களது மனைவிகள் மற்றும் கணவர்கள் எனக்கும் தாத்தா அல்லது பாட்டிகள் ஆவர். எனவே அவர்களின் எண்ணிக்கை 7 பேர்.

இந்த ஏழு குடும்பத்திற்கும் அதிகபட்சம் ஆறு அல்லது ஏழு குழந்தைகள் உள்ளனர். தோராயமாக ஒரு குடும்பத்திற்கு ஐந்து என்று வைத்துக்கொள்வோம். எனவே, 7 * 5 = 35 பேர்.

இந்த 35 பேரும் திருமணம் செய்துகொண்டதால் மேலும் 35 பேர் எனக்கு சொந்தங்கள். அதாவது இந்த 35 ஜோடிகள் அனைவரும் எனக்கு சித்தப்பா, சித்தி, பெரியப்பா, பெரியம்மா, மாமா மற்றும் அத்தை போன்ற உறவுமுறைகளில் வருவர்.

ஒவ்வொரு குடும்பத்திற்கும் சராசரியாக 4 பிள்ளைகள் இருக்கின்றார்களாம். எனவே, 35 * 4 = 140 பேர்.

அவர்களில் எழுபதுக்கும் மேற்பட்டவர்களுக்குத் திருமணம் நடந்துவிட்டதாம். 70 என்றே வைத்துக்கொள்வோமே. எனவே மேலும் 70 பேர் என் உறவினர்கள்.

இந்த 70 குடும்பங்களில் யாரும் 3 குழந்தைகளுக்குமேல் பெறவில்லை. சராசரி 2 குழந்தைகள். எனவே, 70 * 2 = 140 பேர்.

பாட்டி வழி

அம்மா வழி பாட்டி அதாவது என் அம்மாவின் அம்மாவுடன் பிறந்தவர்கள் (3 ஆண் + 3 பெண்) 6 பேர்.

அவர்களது மனைவி மற்றும் கணவர்கள் 6 பேர்.

அவர்களுக்கு சராசரியாக 7 பிள்ளைகள். ஏனெனில் ஒரு சிலருக்கு ஒன்பது பத்து பிள்ளைகள் உள்ளனர். எனவே, 6 * 7 = 42 பேர்.

அவர்களது மனைவி மற்றும் கணவர்கள் 42 பேர்.

இந்த 42 குடும்பத்திலும் சராசரியாக 3 பிள்ளைகள். எனவே, 42 * 3 = 126 பேர்.

அவர்களில் 80 பேருக்கு திருமணம் ஆகிவிட்டதாம். எனவே, மேலும் 80 பேர் என் சொந்தங்களாகின்றனர்.

அந்த 80 குடும்பத்திற்கும் சராசரியாக 2 பிள்ளைகள் உள்ளனர். எனவே, 80 * 2 = 160 பேர்.

அம்மாவுடன் பிறந்தவர்கள் வழி

என் அம்மாவோடு பிறந்தவர்களில் முந்தினவர்கள் 8 பேர், பிந்தினவர்கள் 3. பிந்தினவர்களும் முந்தினவர்களில் ஒருவரும் தற்போது கல்லறையில் உள்ளனர். எனவே தற்போதுள்ள சொந்தங்கள் (4 ஆண் + 3 பெண்) 7 பேர்.

ஏழு பேருக்கும் திருமணம் ஆனதால் மேலும் 7 பேர் என் சொந்தத்தில் சேர்கின்றனர்.

அவர்களது பிள்ளைகள் 7 + 3 + 5 + 4 + 6 + 2 + 4 = 31 பேர்.

அவர்களில் திருமணம் செய்துகொண்டவர்கள் முறையே 7 + 3 + 4 + 3 + 4(மீதம் இருவர் துறவறம் பூண்டுவிட்டனர்.) + 2 + 0(இன்னமும் யாருக்கும் திருமணம் நடக்கவில்லை). எனவே 23 பேர் உறவினர் கணக்கில் சேர்கின்றனர்.

திருமணம் செய்துகொண்ட ஒவ்வொருவருக்கும் மிகச்சரியாக 2 பிள்ளைகள். எனவே, 23 * 2 = 46 பேர்.

அம்மாவோடு பிறந்தவர்கள் எனக்கு நேரடி சொந்தங்கள். ஆதலால், அவர்கள் திருமணம் செய்ததால் தங்கள் மனைவி மற்றும் கணவர்கள் வழியில் புதிதாக சொந்தங்களைப் பெறுகிறார்கள். எனவே, அவர்களும் எனக்குச் சொந்தங்களாகின்றனர். உதாரணமாக என் மாமாவின் மனைவி எனக்கு அத்தை என்றால், அவரின் தங்கை எனக்கு சின்ன அத்தை, அவரின் பெற்றோர்கள் எனக்கு தாத்தா-பாட்டி போன்றுதானே? இதன்படி பார்த்தால் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 20 சொந்தங்களை உருவாக்குகின்றனர். எனவே, 7 * 20 = 140 பேர்.

அதேபோன்று இந்த 7 குடும்பங்களின் பிள்ளைகளில் 23 பேருக்குத் திருமணம் ஆனதால் அவர்களும் புதிய சொந்தங்களை உருவாக்குகின்றனர். எனவே, 23 * 20 = 460 பேர்.

அப்பா வழி சொந்தங்கள்

தாத்தா மற்றும் பாட்டியைச் சேர்த்தால் எண்ணிக்கை 2 பேர்.

தாத்தா வழி

தாத்தாவுடன் பிறந்தவர் 1 பேர். (என்ன இது. ரொம்ப சின்னக் குடும்பமா இருக்கும் போலிருக்கே? அப்ப கணக்கு சீக்கிரம் முடிஞ்சிடும்.)

அவரது மனைவியும் எனக்குப் பாட்டி போன்றுதான். எனவே கணக்கில் மேலும் 1 பேர் சேர்கின்றார்.

இவர்களுக்கு 4 பிள்ளைகள். எனவே அவர்களையும் அவர்களது மனைவி மற்றும் கணவர்களைச் சேர்த்தல் 4 * 2 = 8 பேர்.

அவர்களது குழந்தைகள் முறையே, 2 + 3 + 2 + 2 = 9 பேர்.

பாட்டி வழி

பாட்டியோடு பிறந்தவர்கள் 13 பேர்.

எனவே அவர்களின் துணைகள் 12 பேர் (ஒருவருக்கு திருமணம் ஆகவில்லை).

அவர்களின் பிள்ளைகள் முறையே 1 + 4 + 3 + 4 + 4 + 9 + 2 + 7 + 3 + 2 + 9 + 3 = 51 பேர்.

எனவே அவர்களின் துணைகள் 51 பேர்.

சராசரியாக ஒவ்வொருவருக்கும் இரு குழந்தைகள். எனவே, 51 * 2 = 102 பேர்.

அப்பாவுடன் பிறந்தவர்கள் வழியில்

எங்க பாட்டி 16 பெற்று பெருவாழ்வு வாழ்க என்பதை சரியாக கடைபிடித்த மகராசி. இல்ல… இல்ல… அந்த 16ல ஒரு பேறான குழந்தைச் செல்வத்தை மட்டும் 16 தடவை பெற்றவர்கள். ஆனால் உயிரோடு இருப்பவர்கள் 9 ஆண்கள்தான். எனவே என் அப்பாவுடன் பிறந்தவர்களில் தற்போது உயிரோடு இருப்பவர்கள் 8 பேர்.

அவர்களது மனைவிகள் 8 பேர்.

அவர்களது பிள்ளைகள் முறையே 2 + 2 + 3 + 3 + 2 + 1 + 2 + 2 = 17 பேர்.

இவற்றில் முதல் மூன்று குடும்பங்களில் உள்ள அனைவருக்கும் திருமணம் நடைபெற்றுவிட்டது. மீதமுள்ள குடும்பத்துப் பிள்ளைகளுக்கு மக்கள் தொகைப் பெருக்கத்தில் தங்களது பங்களிப்பை ஆற்ற நேரம் வரவில்லை. எனவே, சொந்தத்தில் சேர்பவர்கள் 2 + 2 + 3 = 7 பேர்.

இந்த மூன்று குடும்பத்திலும் பேரக்குழந்தைகளின் எண்ணிக்கை 4 + 2 + 4 = 10 பேர்.

என் அப்பவோடு பிறந்தவர்கள் ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 20 சொந்தங்களை உருவாக்குகின்றனர். எனவே, 8 * 20 = 160 பேர்.

மேலும் அவற்றில் மூன்று குடும்பங்களில் இருக்கும் திருமணம் ஆன பிள்ளைகள் ஒவ்வொருவரும் இதேபோன்று சொந்தங்களை உருவாக்குகின்றனர். எனவே, 7 * 20 = 140 பேர்.

 

இவ்வளவுதான் என் சொந்தம். அப்பாடா! ஒரு வழியா கணக்கெடுப்பு முடிந்தது. இப்போது மொத்த சொந்தங்களின் எண்ணிக்கையைக் கூட்டுவோம்.

Bold font இல் உள்ளவை மட்டும் கூட்டப்படவேண்டியவை. எனவே, 3 + 2 + 7 + 7 + 35 + 35 + 140 + 70 + 140 + 6 + 6 + 42 + 42 + 126 + 80 + 160 + 7 + 7 + 31 + 23 + 46 + 140 + 460 + 2 + 1 + 1 + 8 + 9 + 13 + 12 + 51 + 51 + 102 + 8 + 8 + 17 + 7 + 10 + 160 + 140 = 2210.

ஆக, என் சொந்தங்களின் எண்ணிக்கை 2210 பேர். துல்லியமாக கணக்கெடுத்தால் அதிகமாக இருக்குமே ஒழிய குறைய வாய்ப்பே கிடையாது. இவர்கள் அனைவரையும் சேர்த்தால் ஒரு ஊராட்சியையே அமைக்கலாம். ஆனால், இவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களில் சிதறிக் கிடக்கின்றனர். நான் சொன்னது சரிதானே? ஒரு ஊரே எனக்குச் சொந்தம் என்பதை நம்புகிறீர்களா? இந்த ஊர் இன்னும் 15 வருடங்களில் பேரூராட்சியாகலாம். நான் இறப்பதற்குள் மாநகராட்சியாகக் கூட மாறலாம்.

இத்தனைப் பேர் எனக்குச் சொந்தங்களாக இருக்கின்றனர். ஆனால், நான் யாருக்கு சொந்தம்? அதுதான் பெரிய கேள்வி. அதாவது, இந்த 2210 பேரில் எத்தனைப் பேர் என்னை அவர்களது சொந்தமாக நினைக்கிறார்கள், நடத்துகிறார்கள்? ஊர்ப்பட்ட சொந்தம் இருக்கு. ஆனால், எனக்குத் தெரிந்தவர்கள் (ஒரு முறையாவது இவர்களைப் பார்த்திருக்கிறேன்) ஒரு 200 பேர்தான் இருக்கும். அவர்களில் நாங்கள் நெருங்கிப் பழகுவது 100 பேர்தான்.

ஆனால் நான் மூன்றே மூன்று பேருக்குதான் சொந்தம்.

Subscribe
Notify of
help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 
guest
6 Comments
Inline Feedbacks
View all comments
Ramani S
ஜூன் 16, 2014 11:59 மணி

ஆழமான வித்தியாசமான தங்கள் சிந்தனை
இப்போது எனக்குள்ளும்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

Ramani S
ஜூன் 16, 2014 11:59 மணி

tha.ma 1

திண்டுக்கல் தனபாலன்
ஜூன் 17, 2014 2:05 காலை

எனது சொந்தங்களின் எண்ணிக்கையில் 2211 பேர்கள் கூடி விட்டார்கள்…

வாழ்த்துக்கள்…

Jeevalingam Kasirajalingam
ஜூன் 17, 2014 5:14 காலை

ஐயா!
எனக்குத் தலையைச் சுற்றுகிறது
சிறந்த கருத்துப் பகிர்வு

ரூபன்
ஜூன் 17, 2014 12:14 மணி

வணக்கம்
ஐயா

ஒரு வித்தியாசமான பதிவு. இத்தனைசொந்தங்கள் இருந்தும் உதவும் சொந்தங்கள் எத்தனை..
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

வெங்கட் நாகராஜ்
ஜூன் 21, 2014 1:44 மணி

எத்தனை சொந்தங்கள்…. ஆனாலும் மூன்று பேர் தான் சொந்தம்….!

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.