1. அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.
தமிழ் எழுத்துக்களில் முதல் எழுத்து ‘அ’ என்பதே.அதுபோல உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் மேலானவர் கடவுள்.
2. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
தன்னைவிட அறிவில் சிறந்தவனான இறைவனை தொழும் பண்பு இல்லையென்றால் ஒருவன் என்னதான் படித்திருந்தாலும் அதனால் ஒரு பயனும் இல்லை.
3. மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.
மலர்போன்று மனதுக்குள் நிறைந்தவனான இறைவனின் காலடியில் அவனே கதி என்று சரணடைந்தோரின் புகழ் உலகம் உள்ளவரை இருக்கும்.
4. வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.
விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவனை பின்பற்றுபவர்களுக்கு எப்போதும் துன்பம் ஏற்படுவதில்லை.
5. இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.
புகழ் பெற விரும்புபவர்கள் இறைவன் என்பதன் பொருளை உணரவேண்டும்.அப்போது மட்டுமே அவர்களுக்கு வாழ்கையில் நன்மை தீமை ஒரே அளவில் நடக்கும்.
6. பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
தனது ஐம்புலங்களைக்(கண்,காது,மூக்கு,வாய்,உடல்) கட்டுப்படுத்தி வாழ்பவர்களை பின்பற்றி வாழ்பவர்கள் நிலையான புகழ்வாழ்வைப் பெறுவர்.
7. தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.
இறைவனை யாரோடும் ஒப்பிட முடியாது.அவனுக்கு மேல் நிகரானவர் எவருமில்லை.அவன் அடியை பின்பற்றி நடப்பவர்களைத் தவிர மற்றவர்களது மனக்கவலை தீர வழியே இல்லை.
8. அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.
அந்தணன் என்பதற்கு சான்றோர் என்பது பொருள்.ஆனால் இறைவன் அறக்கடலாகவே விளங்கும் சான்றோன்.அவனைப் பின்பற்றுபவர்களே தங்களது துன்பக் கடலை நீந்தி கடப்பர்.
9. கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.
ஈடற்ற ஆற்றல் கொண்ட இறைவனை வணங்காதோர் தங்களது ஐம்பொறிகளையும் இழந்த ஊனமுற்றோற்கு சமமாவார்.
10. பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.
வாழ்க்கை எனும் கடலை நீந்தி கடக்க முயல்வோர்,தலையாயவனான இறைவனை தொடர்ந்து செல்லவேண்டும்.இல்லாவிடில் நாம் அந்த கடலை கடக்காமல் திண்டாடுவோம்.
திருக்குறள்-கடவுள் வாழ்த்து,அறத்துப்பால் முதல் அதிகாரம்
ஒரு செயலை செய்யும்முன் இறைவனை வணங்கிவிட்டே செய்யவேண்டும்.அப்போதுதான் அது வெற்றிகரமாக முடியும்.திருவள்ளுவரும் தான் திருக்குறளை எழுத முதல் அதிகாரத்தையே கடவுளை புகழ்ந்து கடவுள் வாழ்த்தாக எழுதியுள்ளார்.
Subscribe
Login
0 Comments