முயற்சி திருவினையாக்கும்

முயற்சி திருவினையாக்கும் பழமொழி விளக்கம்.

ஒத்தப் பழமொழிகள்:

  • முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
  • முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை.
  • அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்.
  • கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்.
  • எறும்பூரக் கல்லும் தேயும்.

முயற்சி திருவினையாக்கும்

தூக்கணாங் குருவி கூட்டைப் பார்த்திருப்பீர்கள். அது ஒரு மரத்திலோ, செடியிலோ அல்லது கிணற்றிலோ தொங்கிக்கொண்டிருக்கும். அதை அந்தக் குருவி எப்படி கட்டுகிறது? காற்று அடிக்கும்போது கூடு ஆடும். ஆனால், விழுந்துவிடாது. அவ்வளவு பலமாக எப்படி அந்தத் தூக்கணாங் குருவி கட்டுகிறது?

அது ஒவ்வொரு புல்லாக எடுத்துவந்து மிகவும் நுணுக்கமாகவும் உறுதியாகவும் கட்டும். அந்தக் கூட்டில் நாம் அதன் விடாமுயற்சி, நுண்ணறிவு மற்றும் உழைப்பைப் பார்க்கலாம்.

தூக்கணாங் குருவி கூடு
தூக்கணாங் குருவி கூடு

ஒரு பாறையில் விழுந்த ஆல மரத்தின் விதை எப்படி பாறையையே பிளந்து, செடியாக முளைத்துப் பின் மரமாகிறது? அதன் முயற்சிதான் அதன் வாழ்க்கைக்கு தொடக்கத்தைத் தருகிறது. இவைகளிடமிருந்து நாம் முக்கியமாகக் கற்றுக்கொள்ள வேண்டியது ‘முயற்சி திருவினையாக்கும்’ என்பதே.

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்:

முயற்சி என்னும் தாரக மந்திரத்தை நாள்தோறும் உபயோகிப்பவர்களுக்கு வாழ்கையில் எந்தக் கஷ்டங்களும் இல்லை என்பதை இந்தப் பழமொழி அறிவுறுத்துகிறது.

முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை:

‘மனிதனால் முடியாதது ஒன்றும் இல்லை’ என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். இங்கு ‘முயன்றால் முடியாதது ஒன்றும் இல்லை‘ என்று இருக்கிறது. அதாவது, மனிதன் என்பதே முயற்சியின் மொத்த உருவம் என்பதை இந்த இரண்டு பழமொழிகளையும் ஒப்பிடும்போது தெரிந்துகொள்ளலாம்.

அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும்:

அம்மியை தூக்கி நகர்த்தும் அளவுக்கு நமக்குத் தெம்பு இல்லையென்றாலும் கூட, அதன் அடிப்பகுதியின் மேல் நம் அடியை (பாதம்) வைத்துத் தள்ளினால் அது நகரும். அதேபோல், இயலாத காரியம்கூட முயன்றால் முடியும்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும்:

நம்பிக்கையோடு முயற்சி செய்பவர்களால் கல்லையேக் கரைக்க முடியும் என்னும்போது மனிதனால் முடியாதது வேறு ஏதேனும் உண்டோ?

எறும்பூரக் கல்லும் தேயும்:

எறும்புகள் சாரை சாரையாக ஒரு கல்லின் மீதோ அல்லது சுவற்றின் மீதோ செல்லும்போது அவை சென்ற தடம் தெளிவாகத் தெரியும். காரணம், அந்த இடம் தேய்ந்து இருக்கும். எறும்புகள் மறைமுகமாக நமக்கு முயற்சியின் தத்துவத்தை உணர்த்துகின்றன. சாதாரண எறும்புகளே கல்லையே தேய்க்கும்போது மனிதர்கள் முயன்றால் மலையையே சாய்க்கலாம்.

அதனால் வாழ்க்கையில் தோல்விகளைக் கண்டு துவளாமல் வெற்றியை அடையும்வரை முயலுங்கள்.

2 Comments

  1. வாணி ஆகஸ்ட் 3, 2015

Leave a Reply

help-hint.png
உங்களது மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன. முடிந்தவரை தமிழில் பின்னூட்டமிடவும். தலைப்பிற்குச் சம்பந்தம் இல்லாத கருத்துக்களைத் தவிர்க்கவும். 
 

மன்னிக்கவும். தாங்கள் விரும்பிய செயல்பாடு முடக்கப்பட்டுள்ளது.