அந்தக் காலத்தில் திருமணத்தின் போது பெரியவர்கள் மணமக்களை வாழ்த்தும்போது ‘வாழை மரம் போல் வாழ்க’ என்று வாழ்த்துவர். இந்தக் காலத்தில் இதை போன்று வாழ்துவது குறைந்துள்ளது. உண்மையில் இந்த வாழ்த்துக்கு அர்த்தம் என்ன?
முதலில் வாழை மரம் பற்றி பார்ப்போம். வாழை மரத்தின் நன்மைகள் பல. அடி முதல் நுனி வரை அதனுடைய அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு உபயோகப்படுகின்றன.
- அதன் இலை உண்கலனாக பயன்படுகிறது.
- கிழங்கு மற்றும் தண்டு சிறுநீரக பிரச்சனைகளை தீர்க்க உதவுகின்றன.
- பூ மற்றும் காய் மூலம் சுவையான கறி சமைக்கலாம்.
- வாழை மரத்தின் நார் பூ கட்ட பயன்படுகிறது.
- வாழை மரத்திலிருந்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத உணவுத் தட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
.ஒரு வருடமே வாழும் வாழை தான் இறந்த பிறகும் மனிதர்களுக்கு உதவ பல இடைக் கன்றுகளை விட்டுச் செல்கிறது.
திருமணமாகும் தம்பதிகள் வாழை மரம் போல் மற்றவர்களுக்கு உதவியாகவும் நல்ல பண்புடனும் நன்மையே உருவாய் வாழவேண்டும்.
பிள்ளைகளையும் தங்களைப் போல நல்ல பண்புடனும் வளர்க்க வேண்டும். அந்த பிள்ளைகள் பின்னாளில் வாழை மர இடைக் கன்றுகளை போல பெற்றோர்களை பிரதிபலிக்க வேண்டும்.
இந்த ஒரு கருதிற்காகவே பெரியவர்கள் வாழை மரம் போல் வாழ்க என்று வாழ்த்துகிறார்கள்.
இது திருமணமானவர்களுக்கு மட்டுமல்ல, அனைவருக்கும் பொருந்தக்கூடிய வாழ்த்து. வாழை மரம் போல் நாமும் நம் சந்ததியருக்கும் நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் நல்லதையே செய்வோம்.