“மீனா ! மீனா ! எங்க இருக்க?” மீனாவை பார்க்க வந்த கமலா கூப்பிட்டாள்.
“இங்கதான் இருக்கேன்.”
இருவரும் நான்காம் வகுப்பு படிக்கும் பள்ளித் தோழிகள்.
“நான் ஒரு பாட்டு புதுசா கத்துட்டு வந்திருக்கேன்.” கமலா கூறினாள்.
“புது பாட்டா ? ஏ ! ஏ ! எனக்கும் சொல்லிக் கொடு !”
பாட ஆரம்பித்தாள் கமலா.
ஐஸ்! ஐஸ்! பள்ளிக்கூடம்
அத்த வீட்டுக்கு போனேன்
பழஞ்சோறு போட்டாங்க
வேணாம்னு வெளிய வந்தேன்
வெளியெல்லாம் பாம்பு
பாம்ப்படிக்க குச்சியெடுத்தேன்
குச்சியெல்லாம் சேறு
குச்சி கழுவ ஆத்துக்குப் போனேன்
ஆத்தெல்லாம் மீனு
மீனு புடிக்க வலையெடுத்தேன்
வலையெல்லாம் ஓட்ட
ஓட்டய தைக்க ஊசி எடுத்தேன்
ஊசியெல்லாம் வெள்ளி
வெள்ளியம்மா வெள்ளி
ஒங்கம்மா குள்ளி.
“ஏய் ! என்னாடி? எங்கம்மாவ குள்ளிங்கர ?”
“இல்லடி,சும்மா பாட்டுதான்!”
இப்படியாக அவர்களுக்குள் வாக்குவாதம் நடந்தது.
பிறகு அவர்கள் விளையாட ஆரம்பித்தார்கள்.
அந்த வீட்டிற்கு சென்றிருந்த எனக்கு அவற்றை பார்த்து எனது சிறிய வயது ஞாபகம் வந்தது.சின்ன வயசுல நான் கூட என் நண்பர்களோடு பாட்டு பாடி விளையாடுவேன்.அவர்களை பார்த்து அப்படியே நான் என் நண்பர்களுடன் சிறு வயதில் விளையாடுவதுபோல் கற்பனை செய்து கொண்டேன்.
அந்த சிறு வயது பருவமே பருவம்.அந்த கள்ளம் கபடம் அற்ற வயதில் எந்த ஒரு வாழ்கையின் சுமைகளும் இல்லாமல் பாடி,ஆடி மற்றும் விளையாடுவது என்ன ஒரு மகிழ்ச்சி தெரியுமா?
பெரியவர்களானால் எவ்வளவு பிரச்சினைகள்.நமக்குள் பொறாமை,போட்டி,பிறருக்கு குழி பறிப்பது,வாழ்க்கை சுமை மற்றும் எண்ணற்ற கஷ்டங்கள்.இதையெல்லாம் பார்க்கும்போது ‘குழந்தைகளாகவே இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’ என்று தோன்றுகிறது.
மிக அழகான பாட்டும்! சிறப்பான கருத்தும்! நல்ல பகிர்வுக்கு நன்றிகள்!
நல்ல கருத்துக்கள்… தொடருங்கள் உங்கள் சிந்தனையை.. வாழ்த்துக்கள் ! நன்றி..